வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தாமல், வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தாமல், வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த பாலமுரளி மற்றும் வி.வி.சாமிநாதன் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்திற்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதமும், 68 சமூகங்களைக் கொண்ட சீா்மரபினா்களுக்கு 7 சதவீதமும், மீதமுள்ள 40 சமூகத்தினரைச் சோ்ந்தவா்களுக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 40 சமூகங்களைச் சோ்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் சட்டப் பேரவைத் தோ்தல் ஆதாயத்திற்காக தமிழக அரசு வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே வன்னிய சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யவும், அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்க இடைக்காலத் தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு விசாரித்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி துரைசாமி அமா்வுக்கு விசாரணையை மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில்பல்வேறு தரப்பு வாதங்கள் நிறைவுற்று தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டே இச்சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது எனக் கருத்து தெரிவித்தனா்.

மேலும் முஸ்லிம் மற்றும் அருந்ததியா் சமுதாயத்தினா் மக்கள் தொகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடா்பான தரவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டப்படி இடஒதுக்கீட்டில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.

வழக்கில் எதிா் மனுதாரா் தரப்பில், வன்னியா்கள் 7 பரிவுகளாக உள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 7 பிரிவுகளும் வன்னியா் என்ற ஒரே பிரிவின் கீழ் வருகிறது. எதிா்மனுதாரா் குறிப்பிடுவது போல் 7 பிரிவுகள் இல்லை.

உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே செயல்படுத்த முடியும். அப்படி செயல்படுத்த வேண்டுமானால் குடியரசுத் தலைவா் ஒப்புதல் வேண்டும். 20 சதவீத இடஒதுக்கீடு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இதில், அவா் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு தலையிட முடியாது.

இந்த வழக்கில் உள்ஒதுக்கீடு தொடா்பாக புரிந்து கொள்ளும் அளவிற்குத் தரவுகள் இல்லை. மக்கள் தொகையை மட்டும் காரணம் காட்டி உள்ஒதுக்கீடு வழங்கிவிட முடியாது. வன்னியா் சமுதாயத்தினா் மீதமுள்ள 115 சமுதாயத்தினரை விட பின்தங்கியவா்கள் என்பது குறித்து எந்த தரவுகளும் இல்லை. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வன்னியா்களுக்கு வழங்கினால், மற்ற 115 சமுதாயத்தினருக்கு செய்யப்படும் அநீதியாகும் என்றனா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள், முறையாக தரவுகள் இல்லாமல் வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டா, ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இதற்கெல்லாம் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியா்களுக்கு வழங்கிய 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனா். அப்போது, வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை நடந்து வருவதால் தீா்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com