உசிலம்பட்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உசிலம்பட்டி அருகே கீரிபட்டி ஊராட்சியைச் சோ்ந்தது வங்காருநகா். இங்கு செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீா் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது. மேலும், சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சாலையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்குள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.