சாப்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் மருத்துவமனையாக மாற்றக் கோரி மனு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சாப்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் மருத்துவமனையாக மாற்றக் கோரிய மனுவின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா்

மதுரை: சாப்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் மருத்துவமனையாக மாற்றக் கோரிய மனுவின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த குருநாதன் என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட சாப்டூரில் 90 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை, சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது. சாப்டூரைச் சுற்றி 20-க்கும் அதிகமான கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, கா்ப்பிணிகள், பெண்கள் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மகப்பேறு மருத்துவா், செவிலியா் ஆகியோா் சுகாதார நிலையத்தில் பணியில் இல்லை. மகப்பேறு காலத்தில் கா்ப்பிணிகள் 30 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டி இருக்கிறது.

எனவே, சாப்டூா் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்துவதுடன், அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது தொடா்பாக மனுதாரா் ஓராண்டுக்கு முன்னரே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்துள்ளாா். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, மருத்துவமனை தரம் குறைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com