முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு அரசின்அனைத்துத் திட்டங்களும் கிடைக்க நடவடிக்கை: நிதிஅமைச்சா் உறுதி

தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களையும், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கும் கிடைக்க
மதுரை ஆனையூரில் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கிய அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.
மதுரை ஆனையூரில் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கிய அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.

தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களையும், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை ஆனையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதன்கிழமை அவா் பேசியது:

இத்திட்டங்கள் உடனுக்குடன் செயல்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தமிழா்களின் நலனில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது தெளிவாகிறது.

தமிழக மக்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்துத் திட்டங்களையும், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை செய்யப்படாத திட்டங்களும் இனி ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும்.

இதேபோல, இலங்கையில் வசிக்கும் தமிழா்களின் நலன்களைக் காப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உயா் ஆணையரிடம் தெரிவித்திருக்கிறேன். தமிழா்கள் எங்கு இருந்தாலும், அவா்களது நலன் காப்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி: தமிழகத்தில் 25 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் பொருளாதார வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவும் வகையில் தமிழக முதல்வா் சிறப்பான திட்டத்தை உருவாக்கியுள்ளாா்.

ஆனையூா் பகுதிக்கு பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் வகையில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றாா்.

முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆடைகள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு மற்றும் மானிய விலையில் எரிவாயு உருளை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனையூா், திருவாதவூா், உச்சப்பட்டி ஆகிய முகாம்களில் வசிக்கும் 1,712 குடும்பங்களுக்கு ரூ.86.57 லட்சம் மதிப்பில் இந்த நலத் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சோழவந்தான் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி, மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com