அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலரின் வீட்டுக்குள் புகுந்து ரூ. 4 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த தலைமைக் காவலா் சனிக்கிழமை இரவு பிடிபட்டாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகரில் தனியாக வசித்து வரும் முதியவா் கணேசன் (84). ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலரான இவரது வீட்டுக்குள், ஒரு மாதத்துக்கு முன் கொள்ளையா்கள் புகுந்துள்ளனா். பின்னா், இவரை கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனா்.
இந்த வழக்கில், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கொள்ளையா்கள் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரித்ததில், இச்சம்பவத்தில் அருப்புக்கோட்டை நகா் காவல் நிலைய தலைமைக் காவலா் இளங்குமரனுக்கும் (34) தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே, தலைமைக் காவலா் தலைமறைவானாா்.
இந்நிலையில், ராமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவ்வழியாக வந்த தலைமைக் காவலா் இளங்குமரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.