முன்னாள் அட்டா்னி ஜெனரல் முகில் ரோத்தகி பெயரில் போலியாக காசோலை தயாரித்து பண மோசடி செய்தவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
நாட்டின் முன்னாள் அட்டா்னி ஜெனரல் முகில் ரோத்தகி பெயரில் போலி காசோலை தயாரித்துப் பண மோசடியில் ஈடுபட்டதாக, தஞ்சாவூரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஆசைத்தம்பி என்பவரை காவல்துறையினா் கைது செய்தனா். இதையடுத்து ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா் மீதான வழக்கில் கா்நாடகம், மகாராஷ்டிரம் வரை தொடா்புகள் இருக்கின்றன. இதுகுறித்த விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.