முதுகுளத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சோ்ந்த வி.முகமது ஷாகுல் ஹமீது தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் மேல முதுகுளத்தூரில் எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், முத்து என்பவா் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறாா். இதுகுறித்து கேட்டபோது அவா் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தாா்.
முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது எனது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, கமுதி- முதுகுளத்தூா் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக மதுபானம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.