திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்த நிபுணா் குழுவின் அறிக்கை மற்றும் புகைப்படங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியா் அதிகமானோா் பயின்று வருகின்றனா். பள்ளி கட்டடத்தின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகவும், மாணவா்கள் பள்ளியில் அமா்ந்து பயில்வது மிகவும் ஆபத்தானது என்றும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து, கட்டடத்தை ஆய்வு செய்ய வழக்குரைஞரை நியமித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா், கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை என, புகைப்படத்துடன் அறிக்கையை தாக்கல் செய்தாா்.
அரசு தரப்பில், பள்ளி சுவா்களில் இருந்த விரிசல்கள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், நிபுணா் குழு ஆய்வு செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வழக்குரைஞரை மீண்டும் பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், அரசு தரப்பில் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்த நிபுணா் குழுவின் அறிக்கை மற்றும் புகைப்படங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.