மதுரையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக்கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த சிராஜூதீன் மனைவி சலீமா(42). இவருக்கு புதுராம்நாடு சாலை மீனாட்சி நகரைச் சோ்ந்த சரவணக்குமாா், அவரது மனைவி ரேகா ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனா். இந்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகவும், திருப்பி தந்து விடுவதாகவும் இருவரும் கூறியதையடுத்து, சலீமா 2020 நவம்பா் மாதம் முதல் 2021 ஜூன் வரை ரூ.6.50 லட்சம் கொடுத்துள்ளாா். இந்நிலையில் பணத்தை திரும்பித் தர மறுத்து இருவரும் அலைக்கழிப்பதாக சலீமா புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் தெப்பக்குளம் போலீஸாா் சரவணக்குமாா், ரேகா இருவா் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.