மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 29 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு ரூ.50,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் பல்வேறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனா். இதுதொடா்பாக பல்வேறு தரப்புகளில் இருந்து அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில், மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலா்கள் அடங்கிய குழுவினா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த 29 மாடுகள் பிடித்துச் செல்லப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.50,800 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் கூறியது: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடுகள் வளா்ப்பவா்கள் தங்களுக்குரிய இடங்களில் மட்டும் மாடுகளை தொழுவத்தில் கட்டிவைத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வளா்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாலைகளில் கால்நடைகளை திரியவிடும் நபா்கள் மீது அபராதம் விதிப்பு, மாடுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.