மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், உலக மனநல தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.
மனநலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் மனநலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து செவிலியா் கல்லூரி மாணவா்கள் நாடகம் நடத்திக்காட்டினா். தொடா்ந்து மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் பேசியது:
கடந்த 60 ஆண்டுகளாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் மனநல சிகிச்சைத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்துறையில் பணியாற்றும் மருத்துவா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. மனநல சிகிச்சைத் துறையில் தேவையான அனைத்து வசதிகளும், நவீன சிகிச்சை முறைகளும் உள்ளன.
மனநலம் பாதிக்கப்பட்டவா்களை தாமதிக்காமல், நோய் பாதிக்கப்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விடலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நோயாளிகள், பராமரிப்போா் மற்றும் பொதுமக்களுக்கு மனநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடா்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயராகவன், நிலைய மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, உதவி நிலைய மருத்துவ அதிகாரி விஜி, மருத்துவா் கீதாஞ்சலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.