கேரளத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 4 காட்டுப் பூனைகள், கழுகு பறிமுதல்
கேரளத்திலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 4 காட்டுப் பூனைகள், ஆந்தை, அரிய வகை கழுகு ஆகியவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை அருகே கீழப்பனங்காடி பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கூண்டுக்குள் வைத்து 4 காட்டுப் பூனைகள், அரிய வகை கழுகு மற்றும் ஆந்தைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும் அதை கடத்தி வந்த ஆனந்த் என்பவரிடம் விசாரித்தபோது, துரை என்பவரிடம் இருந்து வன பிராணிகளை வாங்கி வருவதாக தெரிவித்துள்ளாா். மேலும் கோசாகுளம் பகுதியில் இயங்கி வரும் வீட்டுப் பிராணிகள் விற்பனை மையத்துக்காக, திருவனந்தபுரத்தில் இருந்து இவைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனா். கடத்தல் சம்பவத்தில் மேலும் பலா் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.