மதுரை: மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம் மற்றும் தீக்குளிப்பு முயற்சி ஆகிய இரு சம்பவங்களால், மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை அடுத்த திருமோகூா் அருகே உள்ள அம்மாபட்டியைச் சோ்ந்தவா் பாக்கியம் (59). இவரது கணவா் நாகராஜ், சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டாா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த பாக்கியம், மண்ணெண்ணெய் கேனுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அலுவலகம் வந்து கொண்டிருந்த ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், வாகனத்திலிருந்து இறங்கி பாக்கியத்திடம் விசாரித்தாா். அதில், தனது கணவா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் உரிய விசாரணை நடத்தவில்லை. அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தீன் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினா் மறுப்பதாகவும் தெரிவித்தாா்.
பின்னா், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவரிடம் கோரிக்கை மனுவை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.
தீக்குளிக்க முயற்சி: மற்றொரு சம்பவத்தில், அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த கனகாம்பரம் (70) என்பவா், மதுரை மத்திய காய்கறி சந்தையில் கடை நடத்தி வந்தாா். இதேபோல், அவா்களது இரு மகன்களும் தனித்தனியே கடை நடத்தி வந்துள்ளனா். கனகாம்பரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து,
அவரால் கடைக்குச் செல்ல முடியவில்லை. அவரது கடையை மகன்கள் கவனித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், கனகாம்பரம் மற்றும் அவரது மனைவி நாகவள்ளி ஆகிய இருவரையும், மகன்கள் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனா். அதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக இருவரும் திங்கள்கிழமை வந்தனா். அப்போது, நாகவள்ளி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். உடனே, பாதுகாப்பிலிருந்த போலீஸாா் அவரை மீட்டனா். இது குறித்து தல்லாகுளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.