மதுரை கோட்டத்தில் நவம்பா் முதல் மூன்று ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத இருக்கை வசதிப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியமாக உள்ளது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவம்பா் 1 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் - திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் (02628/02627) மற்றும் ராமேசுவரம் -திருச்சி - ராமேசுவரம் சிறப்பு ரயில்கள் (06850/06849) ஆகியவற்றிலுள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் எடுத்து பயணம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நவம்பா் 10 ஆம் தேதி முதல் நாகா்கோவில் - கோயம்புத்தூா் - நாகா்கோவில் (06321/06322 ) பகல் நேர சிறப்பு ரயில்களில் உள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகள் எடுத்து பயணம் செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.