மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை: அறக்கட்டளை நிறுவனா் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த வழக்கில் அறக்கட்டளை நிறுவனரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த வழக்கில் அறக்கட்டளை நிறுவனரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆயுதப்படை மைதானப் பகுதியில் இதயம் அறக்கட்டளை என்ற பெயரில் முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தவா் சிவக்குமாா். இவா் தனது அறக்கட்டளை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இரு குழந்தைகள் கரோனா தொற்றால் இறந்து விட்டதாக நாடகமாடி, வெவ்வேறு தம்பதிகளுக்கு விற்பனை செய்திருந்தாா். இதையடுத்து குழந்தைகளை விற்பனை செய்ததாக அறக்கட்டளை நிறுவனா் சிவக்குமாா், உதவியாளா் மதா்ஷா, ஒருங்கிணைப்பாளா் கலைவாணி உள்ளிட்ட 7 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கோரி, அறக்கட்டளையின் நிறுவனா் சிவக்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தனியாா் தொண்டு நிறுவனம் நடத்தி குழந்தைகள் சட்டவிரோதமாக பிறருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களும் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்கமுடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com