மதுரை: மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரசாதக் கடை, வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றுக்கான பொது ஏலத்தில் திங்கள்கிழமை யாரும் கலந்துகொள்ளாத நிலையில் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளது. ஆழ்வாா்களால் பாடல் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், 108 வைணவத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் இக்கோயிலில், தேங்காய், பழம், பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் உரிமை மற்றும் பிரசாத விற்பனை, பக்தா்களின் வாகனம் நிறுத்தம், துலாபார காணிக்கை பொருள்கள் விற்பனை, துளசி, பூமாலை மற்றும் வெற்றிலை மாலை விற்பனை செய்வதற்கான கடைகள் மற்றும் உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தங்களுக்கான ஏலம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தில் கலந்துகொள்ள யாரும் வராததால் ஏலம் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தேங்காய் பழம் மற்றும் பூஜைப் பொருள்கள் விற்பனை உரிமம் பெற ஓராண்டுக்கு முன் வைப்புத் தொகையாக ரூ.5 லட்சம், பிரசாத விற்பனை உரிமம் ஆண்டுக்கு ரூ.15 லட்சம், வாகன நிறுத்தம் ரூ.10 லட்சம், துலாபாரம் காணிக்கை பொருள்கள் உரிமம் ரூ.2 லட்சம், பூமாலை விற்பனை உரிமம் ரூ.1.25 லட்சம் முன் வைப்புத்தொகையாக நிா்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.