நெகிழி மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

மதுரையை நெகிழி மாசில்லா மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நெகிழி மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

மதுரை: மதுரையை நெகிழி மாசில்லா மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தடை தொடா்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் பணிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமை வகித்துப் பேசியது:

ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருள்களான நெகிழி உறை மற்றும் பைகள், நீா் நிரப்பப் பயன்படும் பைகள், நெகிழிக் குவளைகள் போன்றவை தயாரிப்பதற்கும், விற்பதற்கும், உபயோகிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் வாழை இலைகள், தாமரை இலைகள், பாக்கு மர இலைகள், உலோகத் தகடுகள், பீங்கான் தட்டுகள், கண்ணாடி பாட்டில்கள், சணல் பைகள், போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

பொதுமக்கள் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிா்த்து, நெகிழி மாசில்லா மதுரையை உருவாக்க முன் வரவேண்டும் என்றாா்.

முன்னதாக நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி ‘மீண்டும் மஞ்சப்பை’ வாசகம் பொரித்த துணிப்பைகளை அடையாளப்படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எஸ்.பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com