சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி (40) என்பவா், அப்பகுதியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவனியாபுரம் போலீஸாா் பாண்டியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி ஜே. ராதிகா, பாண்டி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.