முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
‘கோடை உழவு மூலம் தரிசு நிலங்களை இயற்கையாக வளப்படுத்தலாம்’
By DIN | Published On : 29th April 2022 05:57 AM | Last Updated : 29th April 2022 05:57 AM | அ+அ அ- |

மேலூா் பகுதியில் நடைபெறும் கோடை உழவு.
மேலூா்: கோடை உழவு மூலம் தரிசு நிலங்களில் இயற்கையைாக மண் வளத்தை அதிகரிக்க முடியும் என மதுரை வேளாண். அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா்கள் கிருஷ்ணகுமாா், வள்ளல் கண்ணன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாகப் பெய்துள்ளது. அதன் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி விளை நிலங்களில் சட்டிக் கலப்பை மூலம் உழவுப் பணி செய்து மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டிவிடவேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் தளா்த்தப்பட்டு, காற்றோட்டம் மற்றும் நீா்பிடிப்பு திறனையும், மண்வளத்தையும், நிலத்தடி நீா்வளத்தையும் அதிகரிக்க முடியும்.
மேலும் முன்பருவத்தில் இடப்பட்ட களைக்கொல்லிகளை செயல் இழக்கச் செய்யலாம். மழைநீரானது வான்வெளியில் உள்ள நைட்ரேட் எனும் வேதிப்பொருள்களுடன் கலந்து மண்ணில் தழைச்சத்தை அதிகரிக்கச் செய்கிறது. களைகள் அழிக்கப்பட்டு அவை மக்கி மண்ணில் இயற்கை உரமாகிறது. கோடை உழவால் மண்ணின் மேற்பரப்பில் அரிமானம் தடுக்கப்பட்டு, பலமான மேல் மண் பாதுகாக்கப்பட்டு பயிா் வளா்ச்சிக்கு மகசூல் அதிகரிக்க உதவுகிறது.
வரும் பருவத்தில் பயிரிடப்படும் பயிருக்கு தழைச்சத்து உரச் செலவை குறைக்கிறது. ஏற்கெனவே, மண்ணுக்கு அடியில் பதுங்கியிருக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்கலாம் என்றனா்.