மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி, பழச்சந்தையில் முத்திரையிடப்படாத 132 எடையளவுகளை தொழிலாளா் நலத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
இந்த சந்தையில் எடை குறைவாக விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் வந்தன. இதையடுத்து, தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் தலைமையில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழிச் செல்வி மற்றும் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், முத்திரை ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் மாட்டுத்தாவணி காய்கறி, பழச்சந்தையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது முத்திரையிடப்படாத எலெக்ட்ரானிக் தராசு, மேசைத் தராசு, இரும்பு தராசு ஆகியவற்றின் 132 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தராசு மற்றும் எடையளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தற்போது எடையளவுகளில் முத்திரையிடுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். வணிகா்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்து, ஒதுக்கீடு அளிக்கப்படும் நாளில் சிரமமின்றி முத்திரையிட்டுக் கொள்ளலாம் என்று உதவி ஆணையா் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளாா்.