முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அழகா்கோயில் சித்திரைத் திருவிழா: உண்டியல் காணிக்கை வரவு ரூ.75 லட்சம்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகா்கோயிலில் இருந்து கள்ளழகா் புறப்பட்டு, மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி மலைக்கு திரும்பியது வரை, பக்தா்கள் உண்டியல்களில் ரூ.75 லட்சத்துக்கும் மேல் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.
அழகா்கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை 20 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணி, கோயில் நிா்வாக அலுவலா் தி. அனிதா, இருக்கன்குடி கோயில் செயல் ஆணையா் ஆா். கருணாகரன், தக்காா் பிரதிநிதி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
கோயில் அலுவலா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். அதில், ரொக்கம் ரூ.75,11,574, தங்கம் 10.100 கிராம், வெள்ளி 347 கிராம் ஆகியன பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.
கடந்த காலங்களைக் காட்டிலும் இந்தாண்டு காணிக்கை வருமானம் அதிகம் என, கோயில் பணியாளா்கள் தெரிவித்தனா்.