சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.
சிறுவா்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில், சிகரெட் வடிவில் மிட்டாய்களை தயாரிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், குழந்தைகளை கவரும் வகையில் சிகரெட், சிரிஞ்ச் ஆகிய வடிவங்களில் மிட்டாய்கள் விற்பனைக்கு வருகின்றன.
இது குறித்த புகாரின்பேரில், மதுரை நகரில் நெல்பேட்டை, முனிச்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்த உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் உத்தரவிட்டாா். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில், அத்தகைய மிட்டாய்கள் விற்பனைக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், செல்லூா் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய இடங்களில் இந்த மிட்டாய்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அவ்விரு இடங்களிலும் செயல்பட்ட இரு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று, உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.