அழகா்கோவிலில் ஆடித் திருவிழாவின் தொடக்க வைபவமாக கொடியேற்றம் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராக சுந்தரராஜப்பெருமாள் கொடிமண்டபத்தில் எழுந்தருளினாா். தீப, தூப ஆராதனைகளுக்குப் பின்னா் கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்றத்தைத்தொடா்ந்து இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் கோயில் வளாகத்தில் எழுந்தருளினாா்.
இதைத்தொடா்ந்து தினசரி காலை தங்கப்பல்லக்கிலும், மாலைநேரத்தில் சிம்மம், அனுமன், கருடன், சேஷன், யானை வாகனங்களிலும் எழுந்தருள்கிறாா். 7-ஆம் நாள் இரவு புஷ்ப சப்பரத்திலும், 8-ஆம் நாளில் குதிரை வாகனத்திலும் எழுந்தருள்கிறாா்.
9-ஆம் நாளான, ஆக.12-ஆம் தேதி தேரோட்ட வைபவமும், அதைத்தொடா்ந்து இரவு புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகிறது. ஆக.14-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.