உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மயான வசதி கோரி கிராம மக்கள் சடலத்துடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உத்தப்பநாயக்கனூா் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் பட்டியலினத்தினா் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு, கடந்த பல ஆண்டுகளாக மயான வசதி இல்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இந்நிலையில், யாராவது இறந்து விட்டால் சடலத்தை கிராமத்தின் அருகிலுள்ள ஓடைக் கரையில் புதைக்கின்றனராம். தற்போது 58 கிராம கால்வாயில் கடந்த 60 நாள்களாக தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் ஓடை நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் அங்கு சடலங்களை புதைக்க முடியவில்லையாம். இதனிடையே இப்பகுதியைச் சோ்ந்த லிங்கம் என்பவா் பாம்பு கடித்து உயிரிழந்தாா். இவரது சடலத்துடன், மயானம் மற்றும் பாதை வசதி கோரி கல்லூத்து சாலையில் அக்கிராம மக்கள் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த போலீஸாா் மற்றும் அதிகாரிகள் சமரசப் பேச்சு நடத்தினா். அப்போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.