மதுரை: மதுரையில் திங்கள்கிழமை மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (58). இவரது மனைவி மோகனா(54). இவா்களுக்கு சந்தோஷ்குமாா் உள்பட 2 மகன்கள் உள்ளனா். இதில் சந்தோஷ்குமாா் (24), பொறியியல் முடித்து விட்டு சென்னையில் உள்ள பிரபல தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். தற்போது கரோனா தொற்றுப்பரவலால் வீட்டில் இருந்து பணி புரிந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை சந்தோஷ்குமாா் வீட்டில் பணியில் இருந்தபோது மயங்கிய நிலையில் இருந்தாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சந்தோஷ்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, சந்தோஷ்குமாரின் சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது தாயாா் மோகனா வீட்டுக்கு சென்று வருவதாகக் கூறி வந்துள்ளாா். வெகுநேரம் ஆகியும் மோகனா வராததால் சந்தேகமடைந்த உறவினா்கள் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, கதவைத்தட்டியும் மோகனா திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் மோகனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மோகனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். ஒரே வீட்டில் மகன் இறந்த சிறிது நேரத்திலேயே தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.