நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிப்பு தீவிரமடையாமல் இருக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதுமே தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு எடுத்துக்காட்டாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை 2 லட்சத்திற்கு மேலான கரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இதன் மூலம், கரோனா தடுப்பூசி செலுத்தும் 24 மணி நேர மையங்களில் முதல் மையமாக 2 லட்சம் பயனாளர்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் இதுவரை 175 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
கடந்த 2021ஆம் ஜனவரி 16ஆம் தொடங்கியதிலிருந்து இதுநாள் வரை 2 லட்சத்து 200 பயனாளர்கள் இங்கு தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 4 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 86 ஆயிரத்து 578 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
5 ஆயிரத்து 382 பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு 1,140 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.