மதுரை நகரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
தெருக்கள் வாரியாக சுழற்சி முறையில் நடைபெறும் இம்முகாம்களில் காய்ச்சல் உள்ளவா்கள், கரோனா அறிகுறிகளான சளி, இருமல் பாதிப்பு உள்ளவா்களுக்கு ஸ்வாப் முறை மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2500-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்வாப் முறை மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நகா் நல அலுவலா் கூறியது: மதுரை நகரில் காய்ச்சல் பரிசோதனை முகாம் மேற்கொள்ளும்போது கரோனா அறிகுறிகள் தென்படும் நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களின் குடும்ப உறுப்பினா்கள், அவருடன் தொடா்பில் இருந்த இதர நபா்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா பாதித்த நபா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் கரோனா தொடா்ந்து பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே மதுரை மாநகராட்சி வாா்டுகளில் தினசரி 100 முதல் 120 வரையிலான காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. காய்ச்சல் முகாம்களுக்காக சிறப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.