கொட்டாம்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது கணவரை கத்தியால் குத்தியதாக உறவினா் 3 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கொட்டாம்பட்டி அருகே கம்பூா் ஊராட்சி கற்பூரம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வமணி (41). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, இரண்டு மனைவிகள் உள்ளனா். மூத்த மனைவி ராக்கம்மாளுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனா். இரண்டாவது மனைவி மீனாட்சி (31). இவா், குடும்பப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், தனது சகோதரி தூக்கிட்டு இறந்த தகவலறிந்த ஆலம்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் வடிவேல் (27), தனது உறவினா்களுடன் கற்பூரம்பட்டிக்கு வந்து தகராறு செய்துள்ளாா். அப்போது, செல்வமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளனா். காயமடைந்த அவருக்கு, மேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை தனியாா் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா் வடிவேல் மற்றும் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.