‘கள்ளன்’ திரைப்படத்தைத் திரையிடத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளா், இயக்குநா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த கலைமணி அம்பலம் தாக்கல் செய்த மனு: இயக்குநா் சந்திராபாய் தயாரிப்பில் கரு. பழனியப்பன் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவணங்களில் கள்ளன் என்று இருந்த பெயா் பின்னா் கள்ளா் எனத் திருத்தி அமைக்கப்பட்டது. அப்பெயரிலேயே தமிழக அரசால் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கள்ளன் என்ற பெயரில் எடுக்கப்படும் திரைப்படம், கொள்ளைக் கூட்டத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதுகள்ளா் சமூகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும், அச்சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே கள்ளன் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய இயக்குநா், திரைப்படத் தயாரிப்பாளா் மற்றும் இயக்குநா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை மாா்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.