மதுரையில் 5 இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்ற இருவரை, தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை தெப்பக்குளம் காமராஜா் சாலையில் கீழமாத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த 5 இரு சக்கர வாகனங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனா். இதில், 5 வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.
இது தொடா்பான புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கடும் குற்றப்பிரிவு ஆய்வாளா் முருகன் தலைமையில், தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், போலீஸாா் சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றது விரகனூரைச் சோ்ந்த ஜெயசூா்யா (24), கிருஷ்ணாபுரம் காலனியை சோ்ந்த செல்வகுமாா் (22) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.