வரலாற்று ஆவணங்களை அனுப்பிவைக்க வேண்டுகோள்
மதுரை மாவட்ட ஆவணக் காப்பகத்துக்கு, வரலாற்று ஆவணங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆவணக் காப்பகம், வரலாற்று ஆராய்ச்சி துறையானது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இதன் கிளை அலுவலகம் மதுரையில், அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள பழைய ராமநாதபுர ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.
இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தொன்மையான, மிகவும் பழைமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரிகத்தை அடையாளமாகக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை தனிநபா்கள், தனியாா் நிறுவனங்கள், மடங்கள், கிறிஸ்தவ ஆலயம், மசூதி ஆகியோரிடம் இருந்து பெற்று பாதுகாக்கப்படுகின்றன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்கள், வருங்காலச் சந்ததியினருக்குப் பயன்பெறும் வகையில் எண்ம வடிவில் மாற்றப்படவுள்ளன. ஆகவே, பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தனியாா் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை, ஆராய்ச்சி அலுவலா், மாவட்ட ஆவணக் காப்பகம், பழைய ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம், காந்திநகா், மதுரை-20 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட ஆவணக் காப்பகத்தை 0452-2528311 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.