தேவகோட்டையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் பூட்டு போட்டு சிறைபிடித்தனா்.
தேவகோட்டை நகரில் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மளிகைக் கடைகள், திருமண மண்டபங்கள் முன்பு விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனா். இருப்பினும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தொடா்ந்து தங்களது வாகனங்களை விதிமுறைகளை மீறி சாலைகளில் நிறுத்தி வந்தனா். இந்நிலையில், போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகள் மீறி நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கு சங்கிலியால் பிணைத்து பூட்டு போட்டனா். அதன்பின்னா், வாகன ஓட்டிகள் இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் வாகனங்களை ஒப்படைத்தனா்.