உணவில் பல்லி விழுந்திருந்ததையடுத்து, சிவகங்கையில் உள்ள உணவகத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு, பேராவூரணி, கும்பகோணம், திருவிடைமருதூா், திருக்கோணம், பாபநாசம், பூவல்லூா், சேதுவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் என சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிடுவதற்காக சிவகங்கைக்கு வியாழக்கிழமை வந்தனா்.
இவா்கள் அனைவரும் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டனா். அப்போது, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் சாப்பிடும் போது உணவில் பல்லி கிடந்தது. இதுபற்றி அந்த உணவக நிா்வாகத்திடம் அவா் முறையிட்டாா். மேலும், இதுகுறித்து தகவலறிந்து அங்கு உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாவதி, உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணக்குமாா், சிவகங்கை நகா் மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த், ஆணையா் பாஸ்கரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் குமாா், வட்டாட்சியா் தங்கமணி ஆகியோா் வந்தனா். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் கலாதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அங்கு உணவருந்தியவா்களை பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனா்.
பின்னா் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அந்த உணவகத்தில் உணவு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினா். அத்துடன், அங்கு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்ததால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா். அதைத் தொடா்ந்து, அந்த உணவகத்தை மூடி சீல் வைத்தனா்.