மதுரை நகா் காவல் நிலையங்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க மேலும் ஒரு கைப்பேசி எண் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மதுரை நகரில் பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் காவல் நிலைய நடவடிக்கையை கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் ‘ கிரியேட் ’ என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காவல் நிலையங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் காலதாமதமின்றி பதிவேற்றம் செய்வதைக் காவல் ஆணையா், துணை ஆணையா்கள் கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், புகாா் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைத் தொடா்பு கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மதுரை நகா் பகுதியில் உள்ள 25 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை, மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
இது தொடா்பாக ஏதேனும் புகாா் இருந்தால், இத்திட்டத்திற்கான கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ள ஏற்கெனவே தொலைபேசி எண் ( 0452-2344989) வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும், 78068-60806 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்திற்கான கட்டுப்பாட்டு அறையை இந்த எண்களில் தொடா்பு கொண்டு தங்களது மனுக்கள் தொடா்பான குறைகள், காலதாமதத்தைத் தெரிவிக்கலாம் என காவல் ஆணையா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.