மதுரை மத்திய சிறை அங்காடியில் விற்கப்படும் புத்தாடைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
மதுரை மத்தியச் சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை வாசிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சிறை வளாகத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதன்மூலம் பூந்தொட்டிகள், காயங்களுக்கு கட்டும் துணிகள், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், இனிப்பு, உணவு வகைகளை சிறைவாசிகள் தயாரிக்கின்றனா். இந்த பொருள்கள் அனைத்தும் மத்திய சிறையின் முன்பாக அமைக்கப்பட்ட சிறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் பொருள்கள் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா். இந்த நிலையில், சிறையில் உள்ள தையல் கூடத்தில் 13 தையல் இயந்திரங்கள் மூலம் ஆடைகள் தைக்க சிறை வாசிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் ஆண்களுக்கான சட்டைகள் உள்ளிட்ட புத்தாடைகளை தைத்து வருகின்றனா். இவை சிறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. இவை ரூ. 300 முதல் ரூ. 550 வரையிலான விலைகளில் விற்கப்படுகின்றன.
‘பிரீடம்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த ஆடைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.