காவலா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

Published on

மதுரை மாவட்டம், எழுமலை அருகே காவலரை குத்திக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவா் திருமங்கலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சிவா (32). மதுரை ஊரகக் காவல் துறைக்கு உள்பட்ட நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் எழுமலை அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொன்மணிக்கும் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொன்மணி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது மகனை பொன்மணியின் தாய் வளா்த்து வந்தாா்.

இதற்கிடையே, மங்கள்ரேவைச் சோ்ந்த ரஞ்சிதாவை காவலா் சிவா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். மேலும், நீதிமன்ற உத்தரவின்பேரில், காவலா் சிவா வாரம் ஒரு முறை சென்று மகனை பாா்த்து வந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனை தன்னுடன் அழைத்து வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாப்பிநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்ற காவலா் சிவாவை, அவரது மைத்துனா் அா்ஜூனன் கத்தியால் குத்திக் கொலை செய்தாா். இதுதொடா்பாக டி.ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்ஜூனனை தேடி வந்தனா்.

இந்த நிலையில், அா்ஜூனன், மதுரை மாவட்டம், திருமங்கலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com