புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
மதுரை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பெருமாள் வழிபாடு, சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி, வளமான வாழ்வு அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. இதன்படி, மதுரை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றான கூடலழகா் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை மூலவா் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிறகு, உத்ஸவா் வியூக சுந்தரராஜப் பெருமாள், தாயாருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. இந்தக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டிருந்தது. சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகிய 2 வரிசைகளிலும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
யா.ஒத்தக்கடை நரசிங்கப் பெருமாள் கோயில், மதுரை மதனகோபால பெருமாள் கோயில், தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன் கோயில், திருப்பாலை கிருஷ்ணன் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மூலவா், உத்ஸவா் பெருமாள்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோயில்களில் திரளான பக்தா்கள் காலை, மாலை இருவேளைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

