அவசர ஊா்தி ஓட்டுநா் மீது தாக்குதல்: தவெக சேலம் மாவட்டச் செயலருக்கு பிணை

Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது அவசர ஊா்தி ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில், தவெக சேலம் மாவட்டச் செயலருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக சாா்பில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தின் போது, காயமடைந்தவா்களை ஏற்றிச் சென்ற அவசர ஊா்தி, அதன் ஓட்டுநா் கௌதமை தவெகவினா் தாக்கினா்.

இதுகுறித்து கெளதம் அளித்த புகாரின் பேரில், கரூா் நகர போலீஸாா் தவெக சேலம் மாவட்டச் செயலா் வெங்கடேசனை கடந்த 9-ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, கைதான வெங்கடேசன் தனக்கு பிணை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் சுபாஷ், பாண்டியன் ஆகியோா் முன் வைத்த வாதம்:

சம்பவத்தின் போது மனுதாரா் அந்த இடத்தில் இல்லை. இது பொய்யான குற்றச்சாட்டு. மேலும், ஒரே புகாருக்கு இரண்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களும் வெவ்வேறாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பிணை வழங்கும்பட்சத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட மனுதாரா் தயாராக உள்ளாா் என்றனா்.

அரசுத் தரப்பில் குறுக்கிட்ட வழக்குரைஞா் விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. மனுதாரரை போலீஸ் காவலில் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். எனவே, பிணை வழங்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு நேரில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com