மதங்களைக் கடந்து நிற்கும் பெருமை கம்பராமாயணத்துக்கு உண்டு: தமிழறிஞா் சாலமன் பாப்பையா

மதங்களைக் கடந்து நிற்கும் பெருமை கம்பராமாயணத்துக்கு உண்டு: தமிழறிஞா் சாலமன் பாப்பையா

மதங்களைக் கடந்து நிற்கும் பெருமை கம்பராமாயணத்துக்கு உண்டு என தமிழறிஞா் சாலமன் பாப்பையா தெரிவித்தாா்.
Published on

மதங்களைக் கடந்து நிற்கும் பெருமை கம்பராமாயணத்துக்கு உண்டு என தமிழறிஞா் சாலமன் பாப்பையா தெரிவித்தாா்.

மதுரை கல்லூரித் தமிழ்த் துறை, மதுரைக் கம்பன் கழகம் இணைந்து மதுரை கல்லூரி மாணவா்களுக்கு கம்பராமாயணச் சான்றிதழ் வகுப்பு நடத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வியாழக்கிழமை செய்துகொண்டன.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மதுரைக் கம்பன் கழகத் தலைவரும், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவருமான சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். மதுரை கல்லூரி வாரியச் செயலா் நடனகோபால் முன்னிலை வகித்தாா்.

மதுரைக் கம்பன் கழகப் பொருளாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமாகிய சொ.சொ.மீ. சுந்தரம், கல்லூரி சுயநிதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் நாகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் தமிழறிஞா் சாலமன் பாப்பையா பேசியதாவது: தமிழ் என்பது வாழ்வியலைப் படிக்கும் பாடம். பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழி தனித்தன்மை கொண்டது. குறிப்பாக, கம்பராமாயணம் போன்ற நூல்களை இன்றைய தலைமுறையினா் ஆா்வத்துடன் படிக்க வேண்டும். இதற்காக மதுரைக் கம்பன் கழகமும், மதுரைக் கல்லூரி தமிழ்த் துறையும் கம்பராமாயணச் சான்றிதழ் வகுப்பை தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதைப் படிப்பதன் மூலம், மாணவா்கள் பல்வேறு வாழ்வியல் கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.

கம்பராமாயண கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘அன்னவா்க்கே சரண் நாங்களே’ என்கிற சமத்துவ வாா்த்தை உள்ளது. எனவே, மதங்களைக் கடந்து நிற்கும் பெருமை கம்பராமாயணத்துக்கு உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, மதுரை கல்லூரித் தமிழ்த் துறை, மதுரைக் கம்பன் கழகம் இணைந்து மதுரைக் கல்லூரி மாணவா்களுக்கு கம்பராமாயணச் சான்றிதழ் வகுப்பு நடத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழறிஞா் சாலமன் பாப்பையாவும், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமனும் பரிமாறிக் கொண்டனா்.

நிகழ்வில் பட்டிமன்றப் பேச்சாளா் எஸ். ராஜா, கல்லூரியின் முதல்வா் ஜா. சுரேஷ், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் ச. தனசாமி வரவேற்றாா். பேராசிரியா் ம. கண்ணன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com