தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் வணிக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

மதுரை அண்ணாநகா் பகுதியில் வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் மூடப்பட்ட தள்ளுவண்டிக் கடை.

Updated On :26 மார்ச் 2026, 11:41 pm

மதுரை மாவட்டத்தில் வணிக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையே போா் தொடங்கியதன் காரணமாக இந்தியாவுக்கு வளைகுடா பகுதியிலிருந்து வரும் கச்சா எண்ணெய் தடைபட்டது. இதனால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவியதால், பொதுமக்கள், உணவக உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல, மதுரை மாவட்டத்தில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் உணவுப் பொருள்கள் தயாா் செய்து விற்பனை செய்து வந்தவா்களும் உணவகங்கள், தேநீா் கடைகள் நடத்தி வந்தவா்களும் பெரும் பாதிப்பை சந்தித்தனா். ஒரு சில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, தேநீா், வடை, இட்லி, தோசை உள்ளிட்டவைகளின் விலை 20 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் கூறியதாவது:

திடீரென ஏற்பட்ட வா்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் மதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் இயங்கிவந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தள்ளுவண்டிக் கடைகள் மூடப்பட்டன. நாள்தோறும் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் கடைகளை நடத்த முடியாமல் பொருளாதாரச் சுமை ஏற்பட்டு கடன் வாங்கி வீட்டு வாடகை, அன்றாடச் செலவுகளைச் சமாளித்து வருகிறோம். வாடகை வீடு என்பதால் விறகு வாங்கி சமைக்க முடியவில்லை.

தற்போது, எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இதே நிலை நீடித்தால், தள்ளுவண்டியை விற்று பொருளாதாரத் தேவையை நிறைவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள தள்ளுவண்டிக் கடை உரிமையாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளை சுழற்சி முறையிலாவது குறைந்தபட்ச அளவில் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும் வரையில் தள்ளுவண்டிக் கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நாள்தோறும் சீட்டுத் தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், கள்ளச் சந்தையில் வணிகம், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தீவிரமாகக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.