தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் 91வது ஆண்டு நிறுவனர் நாள் விழா இரண்டு நாள்கள் நடைபெற்றது.
விழாவுக்கு சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன் வரவேற்றார். கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் நிறுவனர் நாள் ஏற்புரை வழங்கினார்.
மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தனது தலைமை உரையில், நிறுவனர் அண்ணாமலை செட்டியாரை நினைவு கூர்ந்தும், கல்லூரி நிர்வாகத்தை வாழ்த்தியும் பேசினார். இக்கல்லூரியில் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த, நலிவடைந்த மற்றும் பெண் குழந்தைகள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக பயில்கின்றனர். இதனால் இக் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தன்முனைப்பு பேச்சாளரும் கவிஞருமான கவிதாசன் கலந்துகொண்டு மாணவர்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும், சுய மேம்பாட்டின் மூலம் நாட்டை உயர்த்துவதற்கு முயற்சிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். செயலர் லெட்சுமி ஆச்சி நன்றி கூறினார்.