ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் ஹவாலாப் பணத்தை சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், எஸ்பி பட்டினம் பேருந்து நிலையம் அருகே சுங்கத்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
சுங்கத்துறை உதவி இயக்குநர் உத்தரவின்பேரில் தொண்டி சுங்கத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் தர்மீந்தர் ஷா ஆகியோர் வாகனங்களை சோதனையிட்டனர். சென்னையில் இருந்து தொண்டி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தை அதிகாரிகள் நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அப்போது பேருந்தில் வந்த ஒரு பயணியிடம் ரூ. 62 லட்சத்து 25 ஆயிரத்து 200 இருந்தது. விசாரணையில் அவர் தொண்டி மரைக்காயர் தெருவைச் சேர்ந்த ஹபீப்முகம்மது மகன் அப்துல் ரவூப் என தெரியவந்தது.
பின்னர் அவரை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் கொண்டு வந்த பணத்துக்கு முறையான ஆதாரம் ஏதும் இல்லாதது தெரிந்தது. மேலும் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் ஹவாலாப் பணமாக இருக்கலாம் எனவும் பணத்தை மதுரை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.