கமுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால், 2 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பணிப்பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கமுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் 145 அங்கன்வாடிகளில் பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2010 லிருந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பணியிடம் காலியாக இருந்து, சில நாள்களுக்கு முன் நிரப்பப்பட்டுள்ளது.
மேலும் அலுவலக மேற்பார்வையாளர் பணியிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம், இதரப்படிகள், காய்கறி கொள்முதலுக்கான பணப்பட்டுவாடா, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும், இதுவரையில் ஓய்வூதியம் பெற முடியாமல் ஊழியர்கள் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருப்பதால், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் பெற முடியாமல், ஊழியர்கள் கடன் வாங்கி குடும்பத்தை வழிநடத்தும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே நீண்ட காலமாக நிலவி வரும் பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்த்து, ஊழியர்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.