வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டம், கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய அலுவலக
வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் மீ. பாக்கியராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு, கூட்டுப் பண்ணையம், மக்காச்சோள படைப்புழு தாக்குதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் இதர திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர், குழித்தட்டு முறையில் மிளகாய் சாகுபடி குறித்து துணை தோட்டக்கலை அலுவலர் எடுத்துரைத்தார். வேளாண் வணிகத் துறையின் உதவி வேளாண் அலுவலர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி அமைப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். விவசாயிகளின் செல்லிடப்பேசியில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து விளக்கம் அளிக்கப்பட்டது. மக்காச்சோளப் படைப்புழு கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, தொழில்நுட்ப மேலாளர் பி.எஸ். ஈஸ்வரி வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார் நன்றி கூறினார்.