நான்கு நகரங்களுக்கு உயர்தர தொழில்நுட்ப (எச்.டி.) கேபிள் தொலைக்காட்சி சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய ஐந்து நகரங்களில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எச்.டி. ஒளிபரப்பில் 380 சாதாரண வகை சேனல்களும், 45 உயர்தர தொழில்நுட்பச் சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் அளிக்கப்படும்.
எச்.டி. சேனல்களுக்கான மாதக் கட்டணம் ரூ.225 ஆகும். இதனுடன் ஜி.எஸ்.டி. கட்டணமும் உண்டு. எச்.டி., ஒளிபரப்பு சேவையைப் பெற விரும்புவோர் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டரை அணுகி ரூ.500 செலுத்தி எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.