ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறைத் தெருவில் அமைந்துள்ள சக்திக்குமரன் செந்திலாண்டவர் ஆலயத்தில் நடந்த மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை மண்டல பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின.
இக் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை விழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு அனுக்கை பூஜை, விக்னேசுவர பூஜை, 108 கலச பூஜை ஆகியன நடந்தன.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முருகப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும், கும்ப கலச அபிஷேகமும்,சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகளை மேலக்கொடுமலூர் குமரய்யா கோயில் பூஜகர்கள் என்.நவநீதக்குருக்கள், மு.ஸ்ரீதர்க்குருக்கள் ஆகியோர் நடத்தினர்.
மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சுப.இலக்குமணன் தலைமையில் அறங்காவலர் குழுவினர், செந்திலாண்டவர் மிதிவண்டிப் பயணக் குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.