ராமநாதபுரத்தில் தனியார் கேட்டரிங் கல்லூரி ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்டதாக கேணிக்கரை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோயில் தெருவில் வசித்து வரும் துரைக்கண்ணு மகன் ராஜசேகர்(45). இவர் தனியார் கேட்டரிங் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை ராஜசேகர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் இருந்த கடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடைக்குள் இருந்து இவரது அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது அங்கு இவர் பலத்த காயத்துடன் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.