கமுதி அருகே 8 ஆண்டுகளாக மலட்டாறு அணைக்கட்டு திட்ட அலுவலகம் பூட்டியே கிடப்பதால், அணையில் பராமரிப்புப் பணிகள் கேள்விக்குறியாகியுள்ளன.
கமுதி குண்டாற்றிலிருந்து மலட்டாறு பிரிந்து சாயல்குடி, கடலாடி பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேர் பாசனத்துக்கு நீராதாரமாக விளங்குகிறது. மலட்டாறு அணைக்கட்டு செங்கப்படை அருகே கீழவலசையில் உள்ளது. இங்குள்ள, 8 மதகுகளின் வழியே அதிகப்பட்சமாக விநாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட முடியும். மலட்டாறு கால்வாய் 16.20 கி.மீ., நீளமும், 3.60 மீட்டர் அகலமும், ஆயிரத்து 348 ஹெக்டேர் பாசன பரப்பும், 17 கண்மாய்கள் நேரடி பாசனமும் கொண்டவையாக உள்ளது.
மலட்டாறு அணைக்கட்டு பராமரிப்புப் பணிக்காக அதிகாரிகள் தங்கி பணியாற்றும் வகையில் அங்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. 2010-க்கு பிறகு போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதனால், அதிகாரிகள் வருகை படிப்படியாக குறைந்தது. தற்போது 8 ஆண்டுகளாக இந்த அலுவலகம் பராமரிப்பின்றி பூட்டியேக் கிடக்கிறது. இதனால், அலுவலகக் கட்டடத்தை சுற்றி, சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.தற்போது, அலுவலகம் செயல்படாததால், மலட்டாறு அணைக்கட்டு முற்றிலும் சேதமடைந்து, பராமரிப்பின்றி உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் தலையிட்டு, மலட்டாறு அணைக்கட்டு நிர்வாக அலுவலகத்தை சீரமைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.