இமானுவேல் சேகரனின் 61-ஆவது நினைவுதினத்தையொட்டி, முதுகுளத்தூர், சாயல்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
பேரையூர், புல்வாய்குளம், வீரம்பல், சடையனேரி, மாரந்தை, காக்கூர், கருமல், கீழக்கன்னிசேரி, முதுகுளத்தூர், கிழக்குத்தெரு, ஆதனக்குறிச்சி, கடையகுளம், தஞ்சாக்கூர், புளியங்குடி, கீழமானாங்கரை, நெடியமாணிக்கம், உலையூர், அலங்கானூர், விளங்குளத்தூர் உள்ளிட்ட முதுகுளத்தூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து 22 வாகனங்கள், சிக்கல் பகுதியில் இருந்து 5 வாகனங்கள், கடலாடியில் இருந்து 18 வாகனங்கள், சாயல்குடி பகுதியிலிருந்து 6 வாகனங்களில் தேவேந்திரர் குல சமுதாய மக்கள் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த சென்றனர்.
செல்லும் வழியில் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த வழித்தடங்களில் சென்று, இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன், முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.