கமுதி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 53 ஊராட்சிகளில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்த மாவட்ட உடற்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கெனவே 15 ஊராட்சிகளில் தனிநபர், குழு, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
பிற ஊராட்சிகளில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர்களுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும் என்றார்.